Sunday, May 31, 2009

கடவுள் ஏன் ஒளிந்து கொண்டார்

”எது மனித சக்திக்கு எட்டவில்லையோ அதுவே தெய்வம் என்கிறான் ஆத்திகன்.”


”இல்லை, இல்லை அது இயற்கை என்கிறான் நாத்திகன்.”


உலகத்தை வெல்ல நினைக்கும் விஞ்ஞானிகளே இதை வெல்ல முடியவில்லை. ஆனால் பிறப்பும் இயற்கை, இறப்பும் இயற்கை என்று சுலபமாக சொல்லிவிடுகிறான் நாத்திகன்.

எது அந்த இயற்கை?
அது தானாக அமைந்தது என்கிறான் .
தானாக என்றால் எப்படி?
எங்கிருந்தோ வந்தது என்கிறான்.
எங்கிருந்தோ என்றால்?
விழிக்கிறான்.


எல்லாம் தானாக உண்டாயிற்று என்றால், குழந்தை ஏன் பூமியில் தானாக உண்டாவதில்லை? தாய், தந்தை என்று ஏன் இரண்டு பேர் தேவைப்படுகிறார்கள்? உண்மயில் ஒவ்வொரு பிறப்பிற்கும் மூலமிருக்கிறது. மூலத்திற்கும் மூலம், சூன்யத்திலிருக்கிறது. அதுதான் ஆதி மூலம் என்கிறான் ஆத்திகன்.


ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.


தெரிந்த பொருளைப் பற்றி விவாதிப்பதை விட தெரியாத பொருள் பற்றி விவாதிப்பதென்பது சுலபமானது. இங்கே சூன்யத்தைப் பற்றிய விவாதம்
சுவையாக நடக்கிறது.


கண்ணில்லாதவன் யானை தடவின கதை மாதிரி, சூன்யத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் வந்துகொண்டேயிருக்கிறது.
கடவுள் இருக்கிறார், இல்லை என்ற இந்த இரண்டு கேள்வி தான் இலக்கியதில் அதிகம் இடம்பிடித்துள்ளன.


எப்போதும் தெளிவாகத் தெரியும் பொருள்பற்றி, இரண்டு சிந்தனை இல்லை. தெரியாத பொருள் மீதே சிந்தனை படர்கிறது. கற்பனை திறன் பெருக வேண்டும் என்றே இந்த சூன்யம் பிறந்தது. தத்துவங்கள் பிறக்கவேண்டும் என்றே சூன்யம் தன் இருப்பை தடம் தெரியாமல் அமைத்தது.
விடை இல்லாத கேள்வியாக இது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
பிறப்பு இறப்பு பற்றி தெரிந்து விட்டால் உலகில் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் அல்லது முலைத்துவிடும். அப்படி அமைந்துவிடாமலிருக்கவே இந்தச்சூன்யம் மறைந்து கொண்டது.



உலகம் மாறி மாறி அமையவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம் என்பது என் கருத்து.


தப்புங்குறீங்களா அப்போ வாங்க விவாதிப்போம்.

Saturday, May 30, 2009

“எங்களுக்குப் பசி எடுப்பது யார் பொறுப்பு?”

கையில் குழந்தையுடன் ஒருத்தி ஆற்றை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.

தூரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

குரல்: “நில், குழந்தையைக் கொல்வதும் தற்கொலை செய்து கொள்வதும் சட்ட விரோதம், தெரியுமா?”

அவள் நின்று திரும்பினாள்;


பெண்: “சட்டமா என்ன அது? எங்கிருக்கிறது?”


குரல்: “உன்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது; குழந்தையைக் கொன்றாலும், நீ தற்கொலை செய்து கொள்ள முயன்றாலும், அது உன்னை பிடித்து விடும்!” பெண்: “நான் பெற்ற குழந்தையை நான் கொல்கிறேன். சட்டம் யார் என்னைத் தடுப்பதற்கு?”


குரல்: “பெறுவது உன் பொறுப்பு.”


பெண்: “எங்களுக்குப் பசி எடுப்பது யார் பொறுப்பு?”


குரல்: “இயற்கையின் பொறுப்பு!”


பெண்: “காரணமானவர்களை விட்டு விட்டு, காரியம் செய்பவர்களைத் தண்டிப்பதுதான் சட்டமா?”


குரல்: “சட்டத்திற்குக் காரணத்தைப் பற்றிக் கவலையில்லை. ஏன் நடந்தது என்பதை பற்றி அது சிந்திப்பதில்லை.எப்படி நடந்தது என்பதையே அது ஆராய்கிறது!”


பெண்: “முட்டாள்தனமான சட்டம். ஒவ்வொரு குற்றமும் ஒவ்வொரு காரணத்தோடு தான் செய்யப்படுகிறது. அந்தக் காரணங்களில் சிலவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தப்பிவிடுகிறார்கள். காரியம் செய்வோர் மட்டும் பிடிபடுகிறார்கள்.”


குரல்: “சட்டத்தில் ஓட்டைகள் இருக்கலாம். ஆனால் இருக்கின்ற சட்டம் , உன் செயலைக் குற்றம் என்கின்றது!” பெண்: “ஓட்டை உடைசல்களுக்கெல்லாம் நான் கட்டுப்பட வேண்டிய அவசியம் என்ன? சோறு போட வக்கில்லாத சட்டத்திற்கு, உயிர்களின் மீது மட்டும் இரக்கம் எங்கிருந்து வந்தது? போய் உங்கள் சட்டத்திற்குச் சொல்லுங்கள். வாழ முடியாதவர்கள் குற்றங்களுக்கு ஆட்படுகிறார்கள்.

எங்கள் துயரங்களைத் தீர்க்க யோக்கியதையில்லாதவர்கள், எங்கள் உயிர்களை ஏன் தொடர்ந்து வருகிறீர்கள்? பசியால் துடித்து இயற்கையாகவே மாண்டு போனால், அது உங்கள் சட்டத்திற்குச் சம்மதமே! அவ்வளவு நாள் துடிப்பானேன், என்று ஒரு நாளில் சாக முயன்றால், அது மட்டும் விரோதமா?


வாழ்க்கையின் துயரத்தைக் காணாதவர்கள் சட்டத்தை படைத்தார்கள். அந்த முதலாளித்துவத்திற்கு நாங்கள் ஏன் ஆட்படவேண்டும்? பத்துக் கோடிப் பேர்களின் உள்ளங்களை கேட்டறிந்த பிறகா பத்துப்பேர் சட்டங்களைப் படைத்தார்கள்? வறண்டு போன வயலில் மழை பொழியும்படி உங்கள் சட்டம் மேகத்திற்கு ஆனையிடுமா? விளைவிக்க யோக்கியதை இல்லாதவர்கள், அறுவடையை ஏன் தடுக்க வருகிறீர்கள்? சட்டம் நியாயத்துக்காகப் போராடவில்லை என்பதும் அது சாட்சிகளோடு தான் மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் உங்கள் புத்திக்கு எட்டவில்லையா?


வக்கீல்களுடைய திறமை, நீதிபதிகளை முட்டாள்களாக்குவதை நீங்கள் காணவில்லையா?சட்ட விளக்கை ஏற்றி வைத்தவருக்கு நல்ல எண்ணம் இருந்திருக்கலாம்.அந்த விளக்கை சாட்சிக் குடத்துக்குள் அடைது வைத்து, சதிராட்டம் ஆடுகிறது உலகம். கட்டுப்பாடானதும் முழுக்க உண்மையையே கண்டு பிடிப்பதுமான ஒரு சட்டம் உருவாக்கப்படும் வரையில் இன்றைய சட்டத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.



பணம் படைத்தவர்கள் நீதியை விலைக்கு வாங்குகிறார்கள். ஏழைகளைச் சட்டம் பழி வாங்குகிறது.சட்டம் பலமான சாட்சியங்களை கேட்கிறது. சாட்சி இல்லத நிரபராதி, குற்றவாளி: சாட்சியம் படைத்த குற்றவாளி, நிரபராதி.பொய்யும் பணமும் உங்கள் சட்டத்தின் இரு கண்கள். நாங்கள் தருமத்தை தேடிக்கொண்டிருந்தபோது நீங்கள் சட்டத்தைக் கொண்டுவந்தீர்கள். தருமம் செத்துக் கிடந்தது; சட்டம் எங்களை கைவிட்டதும் வக்கீல் என்று ஒரு சாதி, சட்டத்தின் ஓட்டைகளுக்குள்ளே புகுந்துகொண்டு விளையாடுகிறது.
வக்கீல் என்றொறு சாதி இருக்கும் வரையில் சட்டம் தானே குற்றம் புரிந்து கொண்டுதான் இருக்கும்.

குரல்: “என்ன தான் நீங்கள் சொல்கிறீர்கள்?”


பெண்: “சட்டம் ஒரு குற்றவாளி; வக்கீல்கள் குற்றவாளிகள்; இதில் எந்தக் குற்றவாளிக்கு எங்களை குற்றம் சாட்ட உரிமை இருக்கிறது? நாங்கள் வந்தோம், போகிறோம். சொந்தப் பொறுப்பில் வந்தவர்கள், சொந்தப் பொறுப்பிலேயே போய் விட்டார்கள் என்று மட்டும் உங்கள் சட்டத்திற்குச் சொல்லுங்கள்.அவள் நடந்தாள்; மறைந்தாள். இயற்கையின் சட்டப்படி ஓடிக்கொண்டிருந்த நதி அவளையும் அவள் குழந்தையையும் அழைத்திக் கொண்டு சென்றது.”


கதை முடிகிறது.


பிகு:

மனிதனின் உண்மையை மறைக்கும் குணம் தான் சட்டங்களை உற்பத்தி செய்தது! உற்பத்தி செய்யப்பட்ட சட்டம் அந்த உண்மையை இறுதிவரை மறைப்பதற்குத் தானும் துனை புரிகிறது! தடுப்பதற்குப் போட்ட வேலியே அழிவிற்கு தலைமை தாங்குகிறது. `நியாயம் நீதி` இவையெல்லாம் மிகவும் அலங்காரமான சொற்கள். குற்றம் புரிந்தவனும் தனக்கு நியயம் கேட்கிறான்; குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது!

இப்போது நம்மில் யாருக்கும் நியாயம் தேவை இல்லை! நியாயத்திற்கே நியாயம் தேவைப்படுகிறது. ”